சென்னை, ராயபுரம் பகுதியில் காரில் கஞ்சா கடத்தி வந்த 4 நபர்களை போலீசார் கைது செய்து 36 கிலோ கஞ்சா, 4 செல்போன்கள் மற்றும் 1 கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
சென்னை, ராயபுரம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் 02.04.2023 காலை, ராயபுரம், G.M.பேட்டை ரோட்டில் வாகனத் தணிக்கையில் இருந்தபோது, அவ்வழியே வந்த காரை நிறுத்தி விசாரணை செய்தபோது, காரில் வந்த 4 நபர்களும் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர். சந்தேகத்தின்பேரில், காரில் சோதனை செய்தபோது, காருக்குள் பெருமளவு கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அதன்பேரில், கஞ்சா கடத்தி வந்த துரைப்பாக்கத்தைச் சேர்ந்த முத்துவேல் (30), மேற்கு தாம்பரம் கார்த்திக் (26), சத்யா (30), வினோத் (25) ஆகிய 4 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 36 கிலோ கஞ்சா, 4 செல்போன்கள் மற்றும் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய 1 கார் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட மேற்படி எதிரிகள் நால்வரும் விசாரணைக்குப் இன்று (02.04.2023) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.